பெரியபாளையம்: சிறுவாபுரி கிராமத்தில் சிவன் கோயிலில் அதன் கோயில் நிர்வாகம், இறைபணி சங்கம் ஆகியவை இணைந்து உழவாரப்பணிகள் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரி கிராமம் உள்ளது. இங்கு, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. புராண காலத்தில், அகத்தியர் வந்து வணங்கியதால் இங்குள்ள மூலவர் அகத்தீஸ்வரர் எனும் திருப்பெயரால் அழைக்கப்படுகின்றார். முற்காலத்தில் பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்தியதால் ஏற்பட்ட களைப்பினை இத்தலத்தில் பார்வதிதேவி போக்கி ஆனந்தமயமாய் அருள்பாலிப்பதால் இங்குள்ள அம்பிகை ஆனந்தவல்லி எனும் திருப்பெயருடன் விளங்குகின்றார். இந்த, சிறப்பு வாய்ந்த திருக்கோயிலில் 6 வாரங்கள் வந்து வழிபட்டால் வேற்றுமை நீங்கி ஆனந்தம் பெருகும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக இருந்து வருகிறது.