விழுப்புரத்தில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி விழிப்புணர்வு பேரணி-ஆட்சியர் (பொ), எம்எல்ஏக்கள் பங்கேற்பு

விழுப்புரம் : விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில் நேற்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஒலிம்பியாட் ஜோதி வருகையையொட்டி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் (பொ) பரமேஸ்வரி தலைமை தாங்கினார். எஸ்.பி. ஸ்ரீநாதா, எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், சிவக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆட்சியர் (பொ) பரமேஸ்வரி தலைமையேற்று ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்று விழுப்புரம் மாவட்ட வீரரிடம் ஒலிம்பியாட் ஜோதியை வழங்கி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து கூறியதாவது, மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டி நாளை (28ம் தேதி) முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெறுகின்றது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகள் பங்கேற்பதுடன் சுமார் 2,000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒலிம்பியாட் ஜோதியை நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்று பொதுமக்கள் தெரிந்துக்கொள்ளும் வகையில் மாவட்டம் தோறும் பல்வேறு இடங்களுக்கு சென்று நிறைவாக சென்னை மாம்மல்லபுரம் சென்றடைகின்றது.அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்துக்கு கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து ஒலிம்பியாட் ஜோதியை வீரர்கள் சக்திவேல், அபினேஷ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட வீரர்கள் எடுத்து வந்தனர்.

அதன் பின்னர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வீரர் ஹேமச்சந்திரன் பெற்றுக்கொண்டு, அவரது தலைமையில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு விழுப்புரம் நகரின் முக்கிய வீதியின் வழியாக எடுத்து செல்லப்பட்டதுடன், தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள மற்ற முக்கிய நகர பகுதிகளுக்கு சென்று அதன் பின்னர் ஒலிம்பியாட் ஜோதி அனுப்பி வைக்கப்படுகிறது என்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் சக்கரை தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் பாண்டி, தாசில்தார் அனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: