மேலூர்: மேலூர் அருகே செமினிபட்டியில் ஆண்டிபாலகர், உச்சிமாகாளியம்மன் கோயில் அருகில் உள்ளது கரும்பாச்சி கண்மாய். நெல் அறுவடைக்கு பிறகு கண்மாயில் உள்ள நீரில் ஏற்கனவே விட்டு வளர்க்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் பிடிக்கும் மீன்பிடி விழா இங்கு ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். நேற்று கிராம பெரியவர்கள் துண்டு வீச, கண்மாயை சுற்றி நின்ற ஆயிரக்கணக்கான கிராம மக்கள் ஒரு சேர கண்மாயில் இறங்கினர். தாங்கள் கொண்டு வந்த வலை, கச்சா, ஊத்தா உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு மீன்களை பிடிக்க ஆரம்பித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான கட்லா, ரோகு, கெழுத்தி, கெண்டை, குரவை போன்ற மீன்கள் சிறியது முதல் பெரியது வரை பிடிபட்டது.