சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் இடியுடன் கனமழை பெய்ததால் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. தமிழக கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடி மலைப்பகுதியில் பரவலாக தொடர் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், திடீரென தாளவாடி, சூசையபுரம், திகினாரை, தொட்டகாஜனூர், மாதஹள்ளி, பாரதிபுரம், ராமாபுரம், சுவர்ணாவதி அணை, சிக்கோலா அணை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழை காரணமாக, சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.