மயிலாடுதுறையில் அனுமதியின்றி இயங்கிய 3 பார்களுக்கு சீல்வைப்பு-டாஸ்மாக் அதிகாரிகள் அதிரடி

மயிலாடுதுறை : மயிலாடுதுறை நகரில் செயல்படும் 5 டாஸ்மாக் கடைகளில் அரசு அனுமதியற்ற பார் நடைபெற்று வருகிறது. அரசு பலமுறை எடுத்துக்கூறியும் பார் நடத்துவதற்கு உரிமம் வாங்காமல் நடத்தப்பட்டு வந்தது.அதிகாரிகள் எச்சரித்தும் அனுமதி வாங்கவில்லை. இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுவந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் நிறுவன மாவட்ட மேலாளர் வாசுதேவன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் நேரடியாக சென்று நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அனுமதிபெற்ற பாரைப்போலவே மயிலாடுதுறையில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளிலும் பார்கள் செயல்பட்டுவந்தது. அதிகாரிகள் சென்று சோதனை மேற்கொண்டதும் பார் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். நூற்றுக்கணக்கான சரக்குப் பாட்டில்களுடன் பார் நடைபெற்று வந்தது. உடனே அவர்களை அப்புறப்படுத்திவிட்டு கடையை இழுத்துப் பூட்டி சீல் வைத்தனர்.

மயிலாடுதுறை பேருந்து நிலையம், மகாதானத்தெரு மற்றும் மயிலாடுதுறை கூறைநாடு டாஸ்மாக் கடைகளில் நடைபெற்ற சோதனையில் அனுமதியில்லாமல் பார் நடத்திவந்ததும், ஏற்கனவே பாரை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்ததும், வழியை வேறுபக்கம் மாற்றி பாரை வழக்கம்போல் திறந்து நடத்தியது தெரியவந்தது. உடனே பாரை மூட அறிவுறுத்தப்பட்டது. அரசிடம் அனுமதிபெற்ற பிறகு பாரை நடத்திகொள்ள வேண்டும என்றும், அதுவரை இங்கே பார் நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அதையும் மீறி நடந்தால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று எச்சரித்துச் சென்றனர்.

Related Stories: