சத்தியமங்கலம் வனப்பகுதியில் பூத்துக் குலுங்கும் செங்காந்தள் மலர்கள்

சத்தியமங்கலம் :  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் செங்காந்தள் மலர்கள் பூத்துக்  குலுங்கும் காட்சி காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. தமிழகத்தின்  மாநில மலராக விளங்கும் செங்காந்தள் மலர் கார்த்திகை மாதத்தில் பூத்துக்  குலுங்குவது வழக்கம். இதன் காரணமாக  கார்த்திகைப்பூ எனவும்  அழைக்கப்படுகிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்  உள்ள தெங்குமரஹாடா வனப்பகுதி, ஆசனூர் மற்றும் கடம்பூர் வனப்பகுதியில் அதிக  அளவில் செங்காந்தள் மலர்கள் பூத்துள்ளன. சாலையோர வனப்பகுதியிலும்  செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்குவதால் சாலையில் செல்லும் வாகன  ஓட்டிகள் செங்காந்தள் மலரை கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

 சத்தியமங்கலம்  வனப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பச்சைப் பசேல் என வனப்பகுதி  அழகாக காட்சியளிக்கும் நிலையில் தற்போது செங்காந்தள் மலர்கள் பூத்துக்  குலுங்குவதால் வனப்பகுதிக்கு மேலும் மெருகூட்டி உள்ளதாக வன ஆர்வலர்கள்  மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். செங்காந்தள் மலர் மருத்துவ குணமிக்கதாக   கருதப்படுவதால் சாலையோர வனப்பகுதியில் பூத்துள்ள செங்காந்தள் மலர்களை  சாலையில் பயணிப்போர் பறித்து செல்கின்றனர்.

Related Stories: