திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர். திருவண்ணாமலையில் 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க சன்னதிகள் அமைந்துள்ளன. கிரிவலம் செல்லும் பக்தர்கள் அஷ்ட லிங்க சன்னதிகளையும் தரிசனம் செய்வது வழக்கம். அதில் 7வது சன்னதியாக அமைந்திருப்பது குபேர லிங்கம். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குபேர கிரிவலம் என்பது பிரபலமாகி வருகிறது. கார்த்திகை மாதம் சிவராத்திரியன்று பிரதோஷ காலத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை குபேர லிங்கத்தை வழிபட்டு, கிரிவலம் சென்றால், வறுமை நீங்கி, வளம் பெருகும் என பக்தர்கள் நம்புகின்றனர். அதனால் ஒவ்வொரு ஆண்டும் குபேர கிரிவலத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.