புதுடெல்லி: டொமினிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்த வழக்கில் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து மெகுல் சோக்சிக்கு ஆன்டிகுவா திரும்பினார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் வாங்கி மோசடி செய்த பிரபல வைர வியாபாரிகளான நீரவ் மோடியும், அவருடைய உறவினர் மெகுல் சோக்சியும் வெளிநாடு தப்பினர். நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்கான நடவடிக்கை, இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஆன்டிகுவா நாட்டுக்கு தப்பிச் சென்ற சோக்சி, அந்நாட்டின் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த மே மாதம் டொமினிக்காவுக்கு படகில் சட்ட விரோதமாக சென்றதால், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை அங்கிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்காக சென்ற சிபிஐ குழு, நீதிமன்ற நடவடிக்கை தாமதத்தால் திரும்பி வந்து விட்டது.