மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா: ஆழியாற்றங்கரையில் நள்ளிரவு மயான பூஜை

ஆனைமலை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு ஆழியாற்றங்கரையோரம் மயான பூஜை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 11ம்தேதி அமாவாசையன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை மறுநாள் 27ம் தேதி பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

முன்னதாக நேற்று நள்ளிரவு மயான பூஜை ஆழியாற்றங்கரையோரம் உள்ள மயானத்தில் நடந்தது. ஆழியாற்றங்கரையோரம் உள்ள மயானத்தில் அமைக்கப்பட்டிருந்த எரிமேடையில், மாசாணியம்மன் அம்மன் உருவாரம் மண்ணால் அமைக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அம்மன் அருளாளி மற்றும் பக்தர்கள் பலர் ஆழியாற்றில் நீராடி, கோயிலுக்கு சென்றனர். பின் மாசாணியம்மனுக்கு 12.30 மணியளவில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

சுமார் 1.30 மணியளவில் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்தில் பொறிக்கப்பட்டிருந்த அம்மன் உருவாரத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘அம்மா தாயே. மாசாணி தாயே’ என்று சரணகோஷம் எழுப்பினர்.

சிறப்பு பூஜை நடந்து கொண்டிருந்தபோது, அம்மன் அருளாளிக்கு அருள் வந்தது, அவர் அம்மன் உருவாரத்தை சுற்றியபடி வந்து, அதில் மேல்நின்று ஆடினார். பின் உருவாரத்திலிருந்த எலும்பை எடுத்து வாயில் கவ்வியபடி ஆக்ரோஷமாக ஆடினார். அப்போது மேள உருமியடித்தபடி மாசாணியம்மன் வரலாற்று பாடல் பாடப்பட்டது. கூடியிருந்த பெண் பக்தர்கள் பலரும் அம்மன் அருள் வந்து ஆடினர். நள்ளிரவு துவங்கிய மயான பூஜை இன்று அதிகாலை வரை நடந்தது.

மயான சிறப்பு பூஜையை காண உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து பக்தர்கள் அதிகளவில் திரண்டு வந்திருந்தனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மயான பூஜையையடுத்து, நாளை மறுநாள் குண்டம் இறங்கும் பக்தர்கள், கோயில் சன்னதியில் காப்புக்கட்டி சென்றனர்.

Related Stories: