திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியத்தில் மர்ம நோய் வேகமாக பரவுகிறது 100க்கு மேற்பட்ட கோழிகள் சாவு

திருத்தணி,: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியங்களில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் வசிக்கின்றனர். இவர்கள் விவசாயத்தை தவிர, கால்நடைகள் வளர்ப்பை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். ஆடு, மாடுகளை விற்பனை செய்து அதன்மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்த நிலையில், திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட நாபலூர், குன்னத்தூர் மற்றும் லட்சுமாபுரம் கிராமங்களில் வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் கோழி குஞ்சுகளை மர்ம நோய் தாக்கி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 100க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளது. இதனால் கோழி வளர்ப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுபற்றி அறிந்ததும் திருத்தணி கால்நடை உதவி இயக்குனர் தாமோதரன் மற்றும் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். நோய் தாக்கி இறந்த கோழிகளை பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். ஆய்வுக்கு பிறகுதான் என்ன நோய் தாக்கி கோழிகள் இறந்துள்ளது என்று தெரியவரும் என்று கால்நடை உதவி இயக்குனர் தாமோதரன் தெரிவித்தார்.இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ‘’தற்போது மர்மநோய் தாக்கி கோழிகள் இறந்து வருகிறது. ஆடு, மாடுகளை நோய்கள் தாக்குவதற்குள் கால்நடை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

Related Stories: