தமிழகம் முழுவதும் விவசாயிகள் சங்கம் நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் 14ம் தேதி காலை முதல் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மத்திய கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறும் ஒவ்வொரு விவசாயியும் ஒரு கணக்கை துவக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். இது விவசாயிகளை அலையவிடும் தேவையற்ற செயல். தமிழக அரசின் இந்த செயல் விவசாயிகளை கந்து வட்டிகாரர்களிடமும், தனியார் அடகு கடைக்காரர்களிடமும் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்குவதற்கு இட்டுச் செல்லும் என்பதை நானும் விவசாயி தான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் உணர வேண்டும்.

எனவே, கூட்டுறவு வங்கிகளில் வழக்கம் போல் பயிர்க்கடன், விவசாய நகைக்கடன் வழங்கவும் கடன் கோரும் அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் கிடைக்கவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் விவசாயிகள் விரோத போக்கை கண்டித்து நகைக்கடன் வழங்க தடைவிதிக்கும் அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்தி ஜுலை 17ம் தேதி (நாளை) தமிழ்நாடு முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Related Stories: