ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே அரசுப் பள்ளி வகுப்பறையின் மேற்கூரை சிமென்ட் உடைந்து விழுந்ததில் மாணவன் படுகாயமடைந்தார். சக மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி குன்னத்தூர் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு குன்னத்தூர், வெள்ளைகவுண்டனூர் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சுமார் 275 மாணவர்கள் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இங்கு குன்னத்தூர் அடுத்த வெள்ளைய கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் குமார் என்பவரது மகன் அன்புசெல்வன்(13) 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடன் அதே வகுப்பில் 39 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் வகுப்பு அறையின் மேற்கூரை சிமென்ட் திடீரென பெயர்ந்து அன்புசெல்வன் தலை மீது விழுந்தது. இதில் மாணவன் பலத்த ரத்தகாயம் அடைந்தான். இதைப்பார்த்ததும் அங்கிருந்த மற்ற மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.