மேலூர் : மேலூர் அருகே சருகுவலையபட்டியை அடுத்துள்ள மெய்யப்பன்பட்டி பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா பாரம்பரிய முறைப்படி நேற்று நடைபெற்றது.விவசாய பணிகள் முடிந்த பிறகு கண்மாயில் குறைந்த அளவு உள்ள நீரில் இந்த மீன் பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
நேற்று காலை கிராம பெரியவர்கள் வெள்ளை வீசி மீன்களை பிடிக்க அனுமதி அளித்தவுடன் ஒரு சேர கண்மாய்குள் இறங்கிய பொது மக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பாரம்பரிய மீன்பிடி உபகரணங்களான கச்சா, ஊத்தா மற்றும் கூடைகள் போன்ற உபகரணங்களை வைத்து மீன்களை பிடிக்கும் பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டனர்.
இதன் முடிவில் நாட்டுவகை மீன்களான கட்லா, கெளுத்தி, ரோகு, ஜிலேபி, அயிரை உள்ளிட்டவற்றை பிடித்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். இது போன்ற சமத்துவ மீன்பிடி திருவிழா நடத்தப்படுவதன் மூலம் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மக்கள் வேற்றுமையை மறந்து சமத்துவமாக மீன்களை பிடித்து மகிழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு பிடித்த மீன்களை யாருக்கும் விற்காமல் வீட்டில் சமைத்து சாப்பிடுவது வழக்கம்.
