குழாய் உடைந்ததால் பயிற்சி மையத்தை சூழ்ந்த தண்ணீர்: பொருட்கள் சேதம்

சின்னாளபட்டி: காந்திகிராமத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் வெளியேறிய நீர், அருகில் உள்ள பயிற்சி மையத்திற்குள் புகுந்தது. இதனால் அங்கிருந்த பொருட்கள் சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டத்தில், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அம்பாத்துரை அனுமார் கோயில் பின்புறம் உள்ள பம்ப் ஸ்டேசனிலிருந்து அம்மையநாயக்கனூர் பேரூராட்சி வரை குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் அருகில் உள்ள அம்பாத்துரை, காந்திகிராமம் ஊராட்சிகளுக்கும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில காந்திகிராமம் ஊராட்சி பகுதிக்கு குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாக சாலையில் ஓடியது. தொடர்ந்து  அருகில் உள்ள இஃப்பா பயிற்சி மையத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

இதனால் பயிற்சி மைய வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கியது. இந்த தண்ணீரில் மையத்தில் இருந்த பொருட்கள் மூழ்கி சேதமடைந்தது. குடிநீர் விநியோகத்தை நிறுத்தும்படி சம்பந்தப்பட்ட பம்பு ஆபரேட்டரிடம் தகவல் தெரிவித்தும் சப்ளை ெசய்வது நிறுத்தப்படவில்லை. இதனால் காந்திகிராமம் பல்கலை கழகத்திற்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இது குறித்து இஃப்பா பயிற்சி மையத்தை சேர்ந்த நாகவள்ளி கூறுகையில், ‘‘குழாய் உடைந்தது குறித்து உடனடியாக தகவல் தெரிவித்தும், குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

ஆத்தூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் தண்டபாணி கூறுகையில், ‘‘காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் ஒருஆள் மட்டத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் யாரேனும் அந்த பள்ளத்தில் தவறி விழுந்தால், உயிர் சேதம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை’’ என்றார்.

Related Stories: