தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் சேர்க்க 20ம்தேதி முதல் விண்ணப்பம்

சென்னை: தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளை சேர்க்க வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தனியார் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து சிறுபான்மையற்ற பள்ளிகளில், சமூகத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை (எல்கேஜி மற்றும் முதல் வகுப்பு) வகுப்புகளில் குறைந்த பட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதன் பேரில் 2026-27ம் கல்வி ஆண்டில் தற்போது மேற்கண்ட பிரிவுகளை சேர்ந்த குழந்தைகள் சேர்க்கப்பட உள்ளனர். மேற்கண்ட சட்டப் பிரிவின் கீழ் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர் rte.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் ஏப்ரல் 20ம் தேதி முதல் மே 18ம் தேதி வரை எங்கிருந்து வேண்டுமானாலும் சேர்க்கை கோரி விண்ணப்பிக்கலாம் என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அதன்படி,
* ஒவ்வொரு பள்ளியும் தொடக்க நிலை வகுப்பு மற்றும் மாணவர் சேர்க்கை கொள்ளளவு குறித்த விவரங்களை ஏப்ரல் 2ம் தேதி முதல் தயாரிக்க வேண்டும்.
* 25% இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கான இடங்கள், பள்ளி அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்துவதோடு, பள்ளிக் கல்வித்துறையின் இணைய தளத்திலும் 7ம் தேதி பதிவேற்ற வேண்டும்.
* 25% இடங்களை பூர்த்தி செய்யும் வகையில் உரிய விதிமுறைகளின்படி உள்ள விண்ணப்ப படிவங்களைக்கோரி, பள்ளி அறிவிப்பு பலகையிலும் பள்ளிக் கல்வித்துறையின் இணைய தளத்திலும் 15ம் தேதி அறிவிப்பு வெளியிட வேண்டும்.
* சேர்க்கைக்கான ஆன்லைன் மூலம் 20ம் தேதி முதல் மே 18ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும்.
* தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பெயர்கள், தகுதியற்றவர்கள் பெயர்கள் நிராகரிப்புக்கான காரணத்துடன் தனியாக பள்ளி அறிவிப்பு பலகையிலும் பள்ளிக் கல்வித்துறை இணைய தளத்திலும் மே 20ம் தேதி காட்சிப்படுத்த வேண்டும்.
* தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை மொத்த கொள்ளளவில் 25%க்கும் அதிகமாக இருந்தால் சமவாய்ப்பு தேர்வு முறை(குலுக்கல் முறை) மே 22ம் தேதி பின்பற்றப்பட வேண்டும்.
* தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்கள், விண்ணப்ப எண்ணுடன் ஒவ்வொரு பிரிவுக்கும் 5 இடங்கள் கொண்ட காத்திருப்போர் பட்டியலுடன் பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு பலகையிலும் இணைய தளத்திலும் மே 22ம் தேதி வெளியிட வேண்டும்.
* மாணவர்கள் சேர்க்கை செயல்முறை(மே 25ம் தேதி முதல் 27ம் தேதி ) நிறைவடைந்த பிறகு பள்ளியின் சம்பந்தப்பட்ட மாவட்ட அளவிலான அதிகாரியிடம் அறிக்கை ஒன்றை மே 29ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Related Stories: