சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நிருபர்களிடம் கூறியதாவது: முதல் நாளில் 573 வேட்புமனுக்கள் இதுவரை தாக்கலாகி உள்ளன. இன்று முதல் விவரங்கள் தவெக பிரசாரத்தின் போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. த.வெ.க. சாலை நெடுக ரோடு ஷோ செல்ல அனுமதி வாங்கவில்லை. 6 இடங்களில் கூட்டத்தை நடத்த அனுமதி பெற்றிருந்தனர். விஜய் பிரசார சம்பவத்தில் தேர்தல் பார்வையாளர்களின் புகார்கள் வந்துள்ளதாக கூறுகிறீர்கள். பலர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளோம்.
முதலில் வேட்புமனு தாக்கல் செய்தவரின் வேட்புமனு முதலாவதாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேட்பு மனுவில் திருத்தங்கள் இருந்தால் அதை பரிசீலனைக்கு முன்னரே முடித்திருக்க வேண்டும். வேட்பாளரால் வர முடியவில்லை என்றால் அவரது அங்கீகாரம் பெற்ற முகவர் அவர் சார்பில் வரலாம். வேட்புமனுவை நிரப்புவது உள்பட இந்த நடைமுறைகள் பற்றி அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்கள் என்ற விகிதாச்சாரத்தின் அடிப்படையில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது பெயர் சேர்ப்புக்காக 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் சில வாக்குச்சாவடிகளில் 1,200க்கும் மேலான வாக்காளர்கள் வரக்கூடும். அதுபோன்ற வாக்குச்சாவடிகளுக்காக துணை வாக்குச்சாவடி அமைக்கப்படும். அது அந்த வாக்குச்சாவடிக்கு அருகேயுள்ள அறையில் அமைக்கப்படும். சில உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்படி எனது வழியாக தேர்தல் ஆணையத்திற்கு த.வெ.க. கடிதம் அனுப்பியுள்ளனர். அதுபற்றி தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
