திருப்பூர்: செல்லாத ரூபாய் நோட்டுகளுடன் தவித்த திருப்பூர் மூதாட்டிகளுக்கு சென்னை கொளத்தூர் எவர்வின் அறக்கட்டளை ₹46 ஆயிரம் நிதியுதவி வழங்கியுள்ளது.திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், பூமலூர் ஊராட்சியை சேர்ந்த சகோதரிகளான பழ. ரங்கம்மாள் (82), கா.ரங்கம்மாள் (78). ஆகியோர் பண மதிப்பு நீக்க விவகாரம் தெரியாமல் பல ஆண்டுகளாக செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ₹46 ஆயிரத்தை சேர்த்து வைத்திருந்தனர். கண் மருத்துவ சிகிச்சைக்கு சென்றபோது பணம் செல்லாத விவரம் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து, நாளிதழ் மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து, திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் நடவடிக்கை எடுத்து மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கு ஆணை வழங்கினார். மேலும், ஈரோடு அடுத்த பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற பரிந்துரை கடிதம் அளித்தார். இந்நிலையில், நேற்று சென்னை கொளத்தூரை சேர்ந்த எவர்வின் அறக்கட்டளை நிர்வாகி புருஷோத்தமன் ₹46 ஆயிரத்திற்கான காசோலையை மூதாட்டிகளிடம் நேரில் வழங்கினார். இதைப் பெற்றுக்கொண்ட மூதாட்டிகள் இருவரும் மகிழ்ச்சி அடைந்து நன்றி தெரிவித்தனர்.