மாமல்லபுரம்: நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு வாலிபர்கள் தப்பினர். மாமல்லபுரம் அடுத்த காரணை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசைதம்பி. அவரது மனைவி ராஜேஷ்வரி (25). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை குண்ணப்பட்டு ரோட்டில் இருந்து காரணை பேருந்து நிலையம் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.
இவரை பின்தொடர்ந்து இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் ராஜேஷ்வரியிடம் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்தனர். அப்போது திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி சரடை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ்வரி இந்த சம்பவம் குறித்து மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை தேடி வருகின்றனர்.