ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் மாணவர்களிடையே அடிதடி: வீடியோ வைரல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில், பஸ் நிலையத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஊத்துக்கோட்டை பேரூராட்சி, திருவள்ளூர் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம், சூளைமேனி, ஆந்திர மாநிலம் தாசுகுப்பம், புதுகுப்பம் போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் மாலை பள்ளி விட்டதும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் நீண்ட நேரமாக பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். சக மாணவர்கள் பஸ் நிலையத்தில் கூடிநின்று வேடிக்கை பார்த்தனர். தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை போலீசார் பஸ் நிலையத்திற்கு வந்தனர். போலீசாரைக் கண்டதும் அடிதடியில் ஈடுபட்ட மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர். மேலும், மாணவர்கள் அடித்துக்கொண்டதை பஸ் நிலையத்தில் இருந்தவர்களில் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் ஊத்துக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் மாணவர்களிடையே அடிதடி: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: