கஞ்சா ஆசாமியுடன் மாணவர்கள் மோதல்: கற்களுடன் ஓடும் வீடியோ வைரல்

பூந்தமல்லி: பூந்தமல்லியில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் கஞ்சா போதை ஆசாமியுடன் மோதலில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு இடையூறாக கற்களுடன் அங்குமிங்குமாக ஓடும் வீடியோ வைரலாகியுள்ளது. பூந்தமல்லியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் பூந்தமல்லி, மாங்காடு, காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை, வேலப்பன்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வரும் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்த பிறகு குமணன்சாவடி பேருந்து நிறுத்தத்திற்கு வந்த மாணவர்கள், மாணவிகளிடம் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த நபருக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து பள்ளி மாணவர்களும், கஞ்சா போதையில் இருந்த நபரும் ஒரு கட்டத்தில் மாறிமாறி தாக்கி கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் கைகளில் கற்களை எடுத்துக்கொண்டு பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்து மிகுந்த சாலையில் அங்குமிங்குமாக ஓடினார். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவானது. இதனைப் பார்த்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பீதியடைந்தனர். இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே அரசுப்பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்தை மடக்கி அதன் மேற்கூறையின் மீது அமர்ந்து வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

The post கஞ்சா ஆசாமியுடன் மாணவர்கள் மோதல்: கற்களுடன் ஓடும் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: