பிரதமர் மோடி - சீன அதிபர் ஜீ ஜின் பிங் வருகை எதிரொலி; மாமல்லபுரத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு; கண்காணிப்பு தீவிரம்

மாமல்லபுரம்: பிரதமர் மோடி சீன அதிபர் ஜீ ஜின் பிங் வருவதையொட்டி மாமல்லபுரத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பேரில் சீன அதிபர் ஜீ ஜின் பிங் அக்டோபர் மாதம் 11-ம் தேதி இந்தியா வர உள்ளார். இரு தலவர்களின் சந்திப்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. மேலும் பிரதமரும், சீன அதிபரும் அக்டோபர் 13-ம் தேதி தங்கி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இவர்கள் இருவரும் கோவளம் பகுதியில் உள்ள FishermanS Cove Resort & spa என்ற நட்சத்திர சொகுசு விடுதியில் தங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவளத்தில் அலைச்சறுக்கு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முட்டுக்காட்டில் படகு சவாரிக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அதே போல கோவளம் முதல் மாமல்லபுரம் உள்ள குடியிருப்புகளில் தங்கியிருக்கும் காஷ்மீர் மாநிலத்தவர்களை உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜீ ஜின் பிங்கும் மாமல்லபுரத்தில் சந்திக்கும் நிகழ்வு உலக அளவில் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்புக்கு பின்னர் சீன சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக மாமல்லபுரம் மாறும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories: