கட்சியை காப்பாற்றுவேன் என சசிகலா கூறுவது, 3 ஆண்டுகள் வேலைக்கு செல்லாமல் திடீரென வேலைக்கு செல்வதுபோல் உள்ளது : எடப்பாடி கிண்டல்

தஞ்சை : மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற ஒன்றிய அமைச்சர் சோமண்ணா பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவில் சிலர் ஜாதி பார்ப்பதாக சசிகலா கூறிய புகாருக்கு எடப்பாடி பழனிசாமி திட்டவட்ட மறுப்பு தெரிவித்தார். மேலும் அதிமுகவை காப்பாற்றப் போவதாக சசிகலா கூறியதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார். இத்தனை நாட்கள் அதிமுகவை காப்பாற்றியது யார் என்று சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுகவில் யாரும் ஜாதி பார்ப்பது இல்லை. ஏதாவது ஒரு குறை கூற வேண்டும் என்பதற்காக சசிகலா அதிமுகவை விமர்சிக்கிறார். ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. தற்போது திடீரென மீண்டும் என்ட்ரி என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?.கட்சியை காப்பாற்றுவேன் என சசிகலா கூறுவது, 3 ஆண்டு வேலைக்கு செல்லாமல், திடீரென வேலைக்கு செல்வது போல் உள்ளது. மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கர்நாடகாவை சேர்ந்தவரை ஐல்சக்தி துறை இணை அமைச்சராக நியமித்தது மிகப்பெரிய துரோகம்.

‘மேகதாதுவில் அணை கட்டுவதாக கூறிய ஜல் சக்தி துறை அமைச்சரின் கருத்து கண்டிக்கத்தக்கது. மேகதாதுவில் அணை கட்டப்படும் என அமைச்சர் கூறியதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். குறுவை சாகுபடி செய்த விவசாயிகளை காப்பீடு திட்டத்தில் இடம்பெற செய்ய வேண்டும். மேட்டூர் அணை திறக்காததால் சுமார் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதி விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். வறட்சி மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தரவேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post கட்சியை காப்பாற்றுவேன் என சசிகலா கூறுவது, 3 ஆண்டுகள் வேலைக்கு செல்லாமல் திடீரென வேலைக்கு செல்வதுபோல் உள்ளது : எடப்பாடி கிண்டல் appeared first on Dinakaran.

Related Stories: