தீப ஒளித் திருநாள்

அடை மழைக்குப் பேர் போன ஐப்பசியின் முக்கியப் பண்டிகை தீபாவளி. ஒரு பக்கம் அடித்து வெளுக்கும் மழை, மறுபக்கம் நரகாசுரனை வதம் செய்ததை  கொண்டாடும் தீப ஒளித் திருநாளாம் தீபாவளி. தீபாவளி பண்டிகை, இந்துக்களின் முதன்மையான பண்டிகைகளில் ஒன்று. அரக்கனான நரகாசுரன் வதம்  செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். நரகாசுரன் வதம் ... இப்போது உள்ள நேபாளத்துக்கு அருகே  உள்ள பிரக்யோதிஷ்பூர் என்ற பூமியின் மன்னனாக இருந்தவன்தான் நரகாசுரன்.

மக்களுக்கு மட்டுமல்லாமல் தேவர்களுக்கும் பெரும் மிரட்டலாக, பயங்கர அச்சுறுத்தலாக இருந்தவன் நரகாசுரன். பூதேவியின் மகன். கடும் தவம் இருந்த  நரகாசுரன், பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். அதாவது, எனது தாயாரின் கையால்தான் எனக்கு மரணம் நிகழ வேண்டும். வேறு யாரும் என்னை  அழிக்க முடியாது என்பதுதான் அந்த வரம். நரகாசுரனின் கடும் தவத்தை மெச்சிய பிரம்மனும், வேறு வழியின்றி அந்த வரம் கொடுத்தார். அதன் பிறகு  நரகாசுரனின் அட்டகாசம் அதிகரித்தது.

கடவுள்களின் அன்னை என்று கூறப்படும் அதிதியின் காது வளையங்களையே திருடியவன் நரகாசுரன். அது மட்டுமா, பல்வேறு கடவுளர்களின் 16 ஆயிரம்  மகள்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன். நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துப் போனதையடுத்து அனைத்து கடவுளர்களும்  ஒன்று சேர்ந்து கிருஷ்ணனை சந்தித்தனர். நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என முறையிட்டனர்.

கடவுளர்களே வந்த முறையிட்டதால் நேரடியாக கிருஷ்ணர் களமிறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி  சத்யபாமாவை (இவர் பூதேவயின் மறு உருவம் என்பதால்) அழைத்துக் கொண்டு கிளம்பினார். நரகாசுரனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை  தொடங்கியது. அப்போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைந்தார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து  நரகாசுரனைக் குறி பார்த்து தாக்கினார்.

நரகாசுரன் வீழ்ந்தான். பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம்  ஒப்படைத்தார். நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணெய் தேய்த்து தலை முழுகினார். இதுதான் இன்றளவும்  தீபாவளியன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கமாக தொடருகிறது.

- கார்த்திக் ஷண்முகம்

Related Stories: