திருமலை: ஆந்திராவில் பாஜவின் ‘பி’ டீமாக நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சியை தொடங்கியதாகவும் பாஜவிடம் பணம் வாங்கி தனது கட்சியை நடத்தி வருவதாகவும் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். இந்நிலையில், அமராவதி அடுத்த மங்களகிரியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளிடையே நேற்று முன்தினம் நடிகர் பவன் கல்யாண் பேசுகையில், ‘நான் பாஜவிடம் பணம் பெற்றுக்கொண்டு பி டீமாக உள்ளேன் எனக்கூறுவதை ஏற்க முடியாது. இதுபோல் பேசினால் செருப்பால் அடிப்பேன்’ எனக்கூறியபடி தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி மேடையில் காட்டினார். இதனிடையே நேற்றிரவு முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை, பவன் கல்யாண் அவசரமாக சந்தித்து பேசினார். இருவரும் சுமார் ஒரு மணி நேரம் பேசினர். அதன்பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.