தமிழகத்தின் உரிமைக்காகத்தான் டெல்லி சென்றேன் நான் கலைஞருடைய மகன், என்றைக்கும் தமிழ்நாட்டுக்காக உழைப்பேன்: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழகத்தின் உரிமைக்காக தான் டெல்லி சென்றேன் என்றும், நான் கலைஞருடைய மகன், என்றைக்கும் தமிழ்நாட்டுக்காக உழைப்பேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சியின் தலைவரும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தின் தலைவருமான பொன்குமார்-மைதிலி பொன்குமார் ஆகியோரின் மகன் வினோத்குமார்-ரேவதி ஆகியோர் திருமணம் சென்னை திருவான்மியூரில் நேற்று நடந்தது. திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். திருமணவிழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த திருமண விழாவில் பேசிய பலர், பல கோரிக்கைகளை எடுத்து வைத்து, இதற்கு முதல்வர் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும், அவர் மூலமாக அது நிறைவேற்றப்படும் வேண்டும் என்ற அந்த நம்பிக்கையோடு அந்த கோரிக்கைகளை எடுத்து வைத்திருக்கிறார்கள். இதை நான் சொல்வதற்குக் காரணம், இவனிடத்தில் சொன்னால் அது நியாயமாக இருந்தால் நிச்சயமாக நிறைவேற்றுவான் என்று அந்த நம்பிக்கை இன்றைக்கு உங்களுக்கு மட்டுமல்ல-தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அந்த உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் நாம் நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும்-அதைத் தொடர்ந்து நடைபெற்றிருக்கும் சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்கிற இந்த அமைப்பிற்கு மக்கள் ஆதரவு தந்து நம்மைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு நடைபெற்றிருக்கும் உள்ளாட்சி அமைப்பின் தேர்தல்-நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறோம் என்று சொன்னால் மக்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு. இந்த மேடையில் வாழ்த்தி உரையாற்றிய திருமாவளவன், பீட்டர் அல்போன்ஸ், வேல்முருகன், அதேபோல மற்றவர்களும் இங்கே பேசுகிறபோது இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் சில சூழ்நிலைகளை எல்லாம் சுட்டிக்காட்டி அவைகள் எல்லாம் நீங்கள்தான் நிறைவேற்ற வேண்டும் என்று என்னைப் பார்த்து எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். நிச்சயமாக-உறுதியாக கலைஞர் அவர்களுடைய வழியில் நின்று, அவர் என்னென்ன சாதிக்க வேண்டும் என்று நினைத்தாரோ-எதை எதை சாதித்துக் காட்டியிருக்கிறாரோ அதையெல்லாம் அவர் வழி நின்று நானும் சாதிப்பேன் என்ற அந்த நம்பிக்கையை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இங்கு சிலர் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார்கள். நான் அண்மையில் துபாய்க்கு சென்றிருந்த நேரத்தில், ஏதோ பல கோடி ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றதாக முன்னாள் முதல்வர்-இன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பேசிய செய்திகளையெல்லாம் நாம் பார்த்தோம். அதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கே எனக்கு முன்னால் பேசியவர்களே அதற்குரிய விளக்கத்தைத் தந்திருக்கிறார்கள். அதையடுத்து அண்மையில் மூன்று நாட்கள் இந்தியாவின் தலைநகரமான டெல்லிக்குப் பயணம் சென்று, நம்முடைய மாநிலத்தின் பிரச்னைகளை எல்லாம் பிரதமர் இடத்தில்-அதற்குரிய அமைச்சர்களிடத்தில் அந்தக் கோரிக்கைகளை எல்லாம் எடுத்துவைத்து உரிமைக்குக் குரல் கொடுத்து வந்திருக்கிறோம். அதையெல்லாம் மூடி மறைக்க-அதைத் தாங்கிக்கொள்ள முடியாத சிலர் என்ன சொன்னார்கள் என்றால், ஏதோ அச்சத்தின் காரணமாக-பயத்தின் காரணமாக சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிற என்னை அதிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் போனேன் என்று சொல்கிறார்கள். ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன். அங்கு சென்று யாருடைய காலிலும் விழுந்து, இதை எனக்கு செய்து தாருங்கள் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் நான் போனேனே தவிர, வேறு அல்ல. ஏனென்றால் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல-பதவியேற்றபோதே நான் சொன்னேன் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்றுதான் சொல்லியிருக்கிறேன். நான் கலைஞருடைய மகன். என்றைக்கும் தமிழ்நாட்டுக்காக உழைப்பேன். அவ்வாறு உழைக்கின்ற அந்த உழைப்பிற்கு பொன்குமாரும் எனக்குத் துணை நிற்பார். இவ்வாறு அவர் பேசினார். திருமண விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, சி.வி.கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்….

The post தமிழகத்தின் உரிமைக்காகத்தான் டெல்லி சென்றேன் நான் கலைஞருடைய மகன், என்றைக்கும் தமிழ்நாட்டுக்காக உழைப்பேன்: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: