போலி நகை அடகு வைத்து மோசடியில் சென்னையை சேர்ந்த 3 பேர் கைது

 

புதுச்சேரி, ஏப். 11: போலி நகை அடகு வைத்து மோசடி செய்ததாக சென்னையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1.20 லட்சம், கார் பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரி பாரதி வீதியை சேர்ந்தவர் அசோக்குமார் (45). இவர் முதலியார்பேட்டை கடலூர் சாலையில் நடத்தி வரும் அடகு கடையில் கார்த்திக் என்பவர் 16 கிராம் தங்க செயினை அடகு வைத்து ரூ.85 ஆயிரம் பெற்று சென்றுள்ளார். அந்த நகை போலியானது என தெரியவந்ததும் இது குறித்து முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் அசோக்குமார் புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். அப்போது இதேபோல் வில்லியனூரில் உள்ள ஒரு அடகு கடையில் போலி நகை அடகு வைத்து கார்த்திக் என்பவர் ரூ.87 ஆயிரம் மோசடி செய்து வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், மோசடியில் ஈடுபட்டது சென்னை சேர்ந்த சுரேஷ்குமார் (33) என்பது தெரியவந்தது.

இதையடுத்து சென்னையில் இருந்த சுரேஷ்குமாரை முதலியார்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் கொட்டிவாக்கத்தை சேர்ந்த பிரசாந்த் (எ) லால் (28) மற்றும் ஷேக் இஸ்மாயில் ஆகியோரும் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களையும் கைது செய்து புதுவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சுரேஷ்குமார் போலி நகை தயாரித்து, அதனை பிரசாந்த் மற்றும் ஷேக் இஸ்மாயில் ஆகியோர் அடகு கடையில் வைத்து பணம் வாங்கி வருகின்றனர்.

பின்னர் எடுத்து வந்த பணத்தில் 60 சதவீதம் சுரேஷ்குமார், 20 சதவீதம் பிரசாந்த் மற்றும் ஷேக் இஸ்மாயில் ஆகியோர் பிரித்துக் கொண்டுள்ளனர். இதையடுத்து போலீசார் 3 பேர் மீதும் வழக்குபதிந்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் ரூ.1.20 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களில் சுரேஷ் மீது 7 வழக்குகளும், பிரசாந்த் மீது 3 வழக்குகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post போலி நகை அடகு வைத்து மோசடியில் சென்னையை சேர்ந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: