டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் ரூ.1,000 கோடி முதலீட்டில் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: ஒரகடம் இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில், மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் திட்டம் நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு 2024-25ம் ஆண்டில் 9.69 சதவிகிதம் வளர்ச்சி வீதத்துடன் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த அதிகபட்ச வளர்ச்சி இதுவாகும். தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது.

இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை 895 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 10,14,368 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 32 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கபட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் திட்டம் நிறுவுவதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

1993ம் ஆண்டு தொடங்கப்பட்ட டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனம், மின்னணு நுகர் பொருட்கள், விளக்குகள் மற்றும் கைபேசி சந்தைகளுக்கான பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. சாம்சங், சியோமி, மோட்டாரோலா, போட், பேனசானிக், ஜிசிலி டெக்னாலஜீஸ், ஒன்ப்ளஸ் போன்ற நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில், அவர்களின் பொருட்களை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. இந்நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில், மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.

அதன்படி, மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில் நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு முகவாண்மையான தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும் டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

The post டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் ரூ.1,000 கோடி முதலீட்டில் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: