தேனியில் மக்கள் குறைதீர் கூட்டம்

*கலெக்டர் தலைமையில் நடந்தது

தேனி : தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களிடம் இருந்து 385 மனுக்கள் பெறப்பட்டது.தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ரஞ்ஜித்சிங் தலைமை வகித்தார். டிஆர்ஓ மகாலட்சுமி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை கொண்ட 385 மனுக்களை அளித்தனர். இம்மனுக்கள் மீது உரிய துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.

முன்னதாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு கல்வி, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உதவித்தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வீதம் 35 குழந்தைகளுக்கு காசோலைகளையும் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.1 லட்சத்து 1 ஆயிரத்து 800 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 15 நபர்களுக்கும், தலா ரூ. 6 ஆயிரத்து 359 மதிப்பிலான தையல் இயந்திரம் 15 பேருக்குமாக மொத்தம் 65 பேருக்கு ரூ.19 லட்சத்து 72 ஆயிரத்து 385 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரஞ்ஜித்சிங் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post தேனியில் மக்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: