2026ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மேற்கொள்ள இருக்கக்கூடிய தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தமிழ்நாட்டின் ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ உரிமை ஆகியவை பாதிக்கப்படும் அபாயத்தையும், மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதை சுட்டிக்காட்டி, முன்கூட்டியே எச்சரிக்கை மணி அடித்து இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்தாண்டு பிப்.14ம் தேதி ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தோம்.
அடுத்தக்கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை கடந்த 5ம் தேதி கூட்டி, இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய மக்கள்தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை கடுமையாக எதிர்த்தும், தற்போது இருக்கும் தொகுதி வரையறை 2026ல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதியளிக்க வேண்டும். அரசியலமைப்பு அதற்குரிய சட்டத்திருத்தத்தில் நாடளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில் 1971ம் ஆண்டின் மக்கள்தொகை அடிப்படையில் தற்போதைய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகள் எண்ணிக்கை இருக்கின்றனவோ; அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு தேவையான அரசியலமைப்பு சட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியும், மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு, பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையை மக்களுக்கு தெளிவுப்படுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நமது நியாயமான கோரிக்கைகளையும் அதனை சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்து செல்லவும், ஒன்றிய அரசுக்கு மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் கூட்டு நடவடிக்கை குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான முன்னெடுப்பில் மிக தீவிரமாக செயல்பட்டு, கடந்த 22ம் தேதி அந்த கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய கட்சி தலைவர்கள் நேரில் பங்கேற்க, ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில் விரிவான ஆலோசனைக்கு பிறகு நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்து வெளிப்படை தன்மையுடன் நடைபெற வேண்டும், 1971ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மேலும் 25 ஆண்டுகள் நீட்டிக்கப்பட வேண்டும், மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை வெற்றிகரமாக செய்த மாநிலங்கள் தண்டிக்கப்பட கூடாது, உரிய அரசியலமைப்பு சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், கூட்டுநடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்ற மாநிலங்களில் இதுகுறித்தான தீர்மானத்தை சட்டமன்றங்களில் நிறைவேற்ற வேண்டும்,
நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்தித்து கடிதம் அளித்து முறையிடுவது, கூட்டாட்சி தத்துவம், ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ உரிமை ஆகியவற்றை பாதுகாப்பது என வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாடு முன்னெடுத்து செல்கின்ற தொகுதி மறுசீரமைப்பிற்கான விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதற்காக இந்த முன்னெடுப்பிற்கு துணை நின்ற பிரதான எதிர்க்கட்சி அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் கூட்டு நடவடிக்கை குழுவில் பங்கேற்ற அனைத்து கட்சிகளுக்கும் தமிழக மக்களின் சார்பில் இப்பேரவையின் வாயிலாக எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற முழக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்று நம்மை போல பாதிக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுத்திட;
நியாயமான தொகுதி மறுசீரமைப்பு பெற்றிட தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளை எல்லாம் அழைத்து சென்று பிரதமரை சந்திக்க இருக்கிறோம் என்பதை இந்த அவைக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
* தமிழ்நாடு முன்னெடுத்து செல்கின்ற தொகுதி மறுசீரமைப்பிற்கான விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
* தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற முழக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும்.
* நம்மைப் போல பாதிக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்.
* நியாயமான தொகுதி மறுசீரமைப்பு பெற்றிட தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளை எல்லாம் அழைத்து சென்று பிரதமரை சந்திக்க இருக்கிறோம்.
The post நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தமிழக எம்பிக்கள் மோடியை சந்திக்க முடிவு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.