சத்தீஸ்கரில் வேதாந்தா நிறுவனத்தின் அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கரின் சக்தி மாவட்டம் சிங்கிதாரி கிராமத்தில் உள்ள வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில், கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு பெரிய தொழிற்சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். முதற்கட்ட அறிக்கைகளின்படி, ஆலைக்கு உள்ளேயே இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்ததால், பெரும் குழப்பமும் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் சுமார் 30 முதல் 40 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் பலர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற அச்சமும் உள்ளது. மேலும் கொதிகலன் வெடிப்புக்கான சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

சம்பவம் நடந்த உடனேயே அவசரகால மீட்புக் குழுக்களும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடங்கினர். வெடிப்பைத் தொடர்ந்து தொழிலாளர்கள் தப்பிப்பதற்காகப் போராடியதால், வளாகத்தில் பீதி நிறைந்த காட்சிகள் காணப்பட்டன.

காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.

Related Stories: