டெல்லி ரிமோட் கன்ட்ரோலுக்கு தமிழ்நாட்டில் சிக்னல் கிடையாது: திருவள்ளூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவள்ளூர்: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

பரப்புரையில் முதல்வர் கூறியதாவது:
தமிழ்நாட்டின் வடக்கு வாசலாக இருக்கும் திருவள்ளூருக்கு வந்திருக்கிறேன். திருவள்ளூரின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளேன். தமிழ்நாட்டிற்கு ஆபத்து எப்போதுமே வடக்கில் இருந்துதான் வரும்.  அந்த வகையில் வடக்கில் இருந்து வரும் என்டிஏ என்ற ஆபத்தை தடுத்து நிறுத்தும் தேர்தல் இது. தமிழ்நாட்டுக் காவல் தெய்வங்கள் வடக்கு நோக்கியே திரும்பி இருக்கும்

அதிமுக ஆட்சியில் நாள்தோறும் ஒரு கோமாளித்தனமே அரங்கேறியது. அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு தலைகுனிந்து கிடந்தது. பாஜகவின் கிளைக் கழக செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்துள்ளனர்.  குரங்கு அப்பத்தை பங்கிட்டுக் கொடுத்தது போல, அதிமுகவை பாஜக பங்கு போட்டு கொடுத்துள்ளது. இந்தியை திணிக்கும் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்த நினைக்கும் பாஜகவை அடக்க வேண்டும். பழனிசாமி இருக்கும் தைரியத்தில்தான் பாஜக ஆட்சி அமைக்க நினைக்கிறது.

தமிழ்நாடு எப்போதும் தனித்துவமான மாநிலம். அதற்கு காரணம் திமுக. எத்தனை ஏவல் அமைப்புகளை அழைத்து வந்தாலும் தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல்தான். தமிழ்நாடு என்றைக்கும் டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் என்று ஓராண்டுக்கு முன்பே சவால்விட்டேன். டெல்லி ரிமோட் கன்ட்ரோலுக்கு தமிழ்நாட்டில் சிக்னல் கிடையாது. தமிழ்நாட்டில் என்.டி.ஏ.வுக்கு நோ என்ட்ரி என்று நீங்கள் செலுத்தும் வாக்கு மூலம் காட்ட வேண்டும்.

பழனிசாமியின் ஆட்சியில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பின்தங்கி கிடந்தது. அதிமுக ஆட்சியில்  தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 0.07%ஆக தேங்கிப் போய் கிடந்தது. திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி 11.19%ஆக இரட்டை இலக்கத்தை எட்டி சாதனை படைத்துள்ளோம். நான் ஆட்சிக்கு வந்ததும் விடியல் பயணத் திட்டத்துக்கு முதல் கையெழுத்திட்டேன்.  அண்ணன் சீர் என்று விடியல் பயணத் திட்டத்தை பெண்கள் பெருமையுடன் கொண்டாடினர்.

நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். திராவிட மாடல் அரசின் சாதனைகளை நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே போகலாம்.  தமிழ்நாடு முழுவதும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளோம். உண்மையாக உழைத்தால் ஊரே ஏற்றி வைத்து கொண்டாடும்.  வாய்க்கொழுப்புடன் அசிங்கமாக அவதூறாக பேசிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவதூறாகப் பேசி வரும் எடப்பாடி பழனிசாமியை 11வது தோல்வி பழனிசாமியாக மாற்றிவிடலாமா?

தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல போராடுவேன்; போராடியே சாவேன்.  தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது என்று ஆர்.என்.ரவி கூறியது தனி நபரின் குரல் அல்ல, பாஜகவின் குரல். நமது தாய்க்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டினார். நாங்கள் நினைத்தால் தமிழ்நாட்டையே இரண்டாக உடைப்போம் என்று திமிராக பேசினார்கள். ஸ்டாலின், திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை பாஜகவால் தொட்டுக் கூட பார்க்க முடியாது. முடிந்தால் தமிழ்நாட்டுக்கு தட்சிண பிரதேசம் என்று பெயர் வைத்து பாருங்கள்; சும்மா இருக்க மாட்டோம். எல்லோரும் அடிமை சாமி மாதிரி சும்மா இருக்க மாட்டோம்; நாங்கள் சுயமரியாதைக்காரர்கள்.

உண்மையாக உழைத்தால் ஊரே ஏற்றி வைத்து கொண்டாடும் என முதல்வர் பேசினார்.

Related Stories: