ஆரல்வாய்மொழி : பூதப்பாண்டி அருகே எட்டாமடை பகுதியை சேர்ந்தவர் மரிய ஞானம் மகன் அருளானந்தம். கட்டிட தொழிலாளி. இவரும் அழகியபாண்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி மகன் உலக நாதன் என்பவரும் சேர்ந்து கட்டிட வேலைக்காக கடந்த 18ம் தேதி தூத்துக்குடிக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் இருவரும் நேற்று முன் தினம் இரவு வீடு திரும்ப திட்டமிட்டனர். இதையடுத்து அருளானந்தம், குமாரசாமி ஆகியோர் ஜெஸ்டின் என்பவருக்கு சொந்தமான ஜீப்பில் பூதப்பாண்டி நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். ஜீப்பை ஜெஸ்டின் ஓட்டினார்.
இரவு சுமார் 11.30 மணியளவில் செண்பகராமன்புதூர் அருகே வந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது ஜீப் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் ஜீப் மற்றும் டிராக்டர் நொறுங்கின.ஜீப்பின் பின் இருக்கையில் இருந்த அருளானந்தம் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஜெஸ்டினுக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. உலக நாதன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் ஆரல்வாய்மொழி உதவி ஆய்வாளர் சதீஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு காயமடைந்த ஜெஸ்டினை மீட்டு சிகிச்சைக்காகவும், உயிரிழந்த அருளானந்தத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெஸ்டினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post செண்பகராமன்புதூர் அருகே டிராக்டர் மீது ஜீப் மோதல் கட்டிட தொழிலாளி பலி appeared first on Dinakaran.