ஊட்டி, மார்ச் 24: நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் தற்போது ஜெகரண்டா மலர்கள் பூத்துள்ளதால், இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், பல்வேறு சோலை மரங்களில் அவ்வப்போது மலர்கள் பூத்துக் குலுங்கும். இவைகள் பல வண்ணங்களில் பூக்கும் நிலையில், இவைகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலையோரங்களில் பல்வேறு வகையான சோலை மரங்கள் பூக்கும். குறிப்பாக, நீல நிறத்தில் ஜெகரண்டா மலர்கள், சிவப்பு நிறத்தில் சேவல் கொண்டை மலர்கள் போன்றவைகள் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து வருகிறது.
தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களின் நடுவே, நீல நிறத்தில் ஜெகரண்டா மலர்கள் பூத்துள்ளன. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் போன்ற பகுதிகளில் சாலையோரங்களில் மற்றும் தேயிலை தோட்டங்களின் நடுவே இந்த மரங்களில் தற்போது மலர்கள் பூத்து காணப்படுகிறது. பொதுவாக இவைகள் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் பூத்துக் குலுங்கும். இம்முறை சற்று முன்னதாக பூத்துள்ளன. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பூத்துள்ள இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.
The post நீலகிரியில் பூத்த ஜெகரண்டா மலர்கள் appeared first on Dinakaran.