குன்னூர் மலைப்பாதையில் பூக்கும் நாகலிங்க மலர்கள்; சுற்றுலா பயணிகள் வியப்பு

குன்னூர், மார்ச் 23: குன்னூர் மலைப்பாதையில் நாகலிங்க மலர்கள் பூத்துக்குலுங்குவது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் துவங்குவது வழக்கம். அதேப்போல் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக குன்னூர் மலைப்பாதையில் உள்ள சாலையோர மரங்களில் பல்வேறு வகையான பூக்கள் பூக்க துவங்கும். குறிப்பாக ரெட் லீப், சேவல் கொண்டை மலர்கள், ஜகரண்டா உட்பட பல்வேறு வகையான மலர்கள் பூத்து குலுங்கும். அதேப்போல் குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையோரம் பர்லியார் பகுதியில் நாகலிங்க மலர்கள் தற்போது பூத்து குலுங்கி வருகிறது. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

அதனை அவ்வழியாக வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து பார்த்து ரசிப்பதுடன், புகைப்படமும் எடுத்து செல்கின்றனர். மேலும் இவ்வகை மலர்கள் நாகபாம்பு வடிவிலும், சிவலிங்கம் போலும் இருப்பதால் நாகலிங்க மலர்கள் என அழைக்கப்படுகிறது. இந்த மரத்தில் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மலர்கள் பூத்து குலுங்கும். ஒரு மரத்தில் அதிகபட்சமாக ஆயிரம் மலர்கள் வரை பூக்கும் தன்மை கொண்டது. பாம்பு படமெடுப்பது போன்ற மலரின் தோற்றத்தால் இந்த மலர் புனிதமாக கருதப்படுகிறது. குறிப்பாக சிவலிங்க பூஜைக்கு இந்த மலர்கள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

The post குன்னூர் மலைப்பாதையில் பூக்கும் நாகலிங்க மலர்கள்; சுற்றுலா பயணிகள் வியப்பு appeared first on Dinakaran.

Related Stories: