அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் எதிரொலி; அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது: தலைமை செயலாளர் எச்சரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என தலைமை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இதில், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது முதன்மையான கோரிக்கையாக உள்ளது. மேலும், ஆண்டுக்கு 15 நாட்கள் விடுப்பு சரணடைவு திட்டத்தை மீண்டும் கொண்டுவருதல், பணிக்கொடை உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்றவையும் அவர்களின் கோரிக்கைகளில் அடங்கும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில், இன்று மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது .

இதையடுத்து, பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில், “அங்கீகரிக்கப்படாத சங்கங்கள், சில கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய முன்வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் அல்லது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது, அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டைப் பாதிக்கும். எனவே, பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது. மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பகுதிநேர ஊழியர்கள், தினசரி ஊதியம், ஒப்பந்த ஊதியம் பெறுபவர்கள், பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்களின் விவரங்களை சேகரிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

The post அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் எதிரொலி; அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது: தலைமை செயலாளர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: