நிதி விவகாரத்தில் தமிழ்நாடே கொந்தளிப்பில் இருப்பதை மடைமாற்றி பாஜவை காப்பாற்றுகிறார் எடப்பாடி: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி காட்டம்

சென்னை: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று தனது வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததும் உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், திமுக அரசை கண்டிக்கலாம். ஆனால், நடவடிக்கை எடுத்த பிறகும் அரசை எடப்பாடி விமர்சிப்பது தன்னை முன்நிறுத்தி கொள்ளும் அரசியலுக்குதானே? மும்மொழிக்கொள்கையை பாஜ புகுத்த முயற்சிக்கிறது, தமிழ்நாட்டிற்கு உரிய வரிப்பகிர்வு தருவதில்லை, ஒன்றிய பட்ஜெட்டிலும் தமிழக திட்டங்கள் இல்லை, கல்விக்கு நிதி இல்லை, இப்போது பேரிடர் நிவாரணமும் இல்லை என தொடர்ந்து மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.

இதையெல்லாம் மடைமாற்றி தன்னுடைய பாஜவின் ராஜ விஸ்வாசத்தை காட்டுகிறார் பழனிசாமி. ஒன்றிய அரசுக்கு அவப்பெயர் வராமால் இருக்க பாலியல் வன்கொடுமை என்று சொல்லி மடைமாற்றும் அரசியல் யுக்தியை செய்கிறார் பழனிசாமி. அண்ணா பல்கலைக் கழக பாலியல் வழக்கு மற்றும் காவல் அதிகாரி மீதான பாலியல் வழக்கில் தமிழக அரசின் செயல்பாட்டை சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் கடந்த 17ம் தேதி பாராட்டினர்.

அத்துடன், மேலதிகாரிகள் மீது பாலியல் புகார் கொடுத்தால் நியாயம் கிடைக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். நீதிமன்றத்திற்கு தெரிந்து உண்மை கூட எதிர்க் கட்சித் தலைவருக்கு தெரியவில்லை. பாலியல் வன்கொடுமை என்பது ஒரு சமூகப் பிரச்சினை. மிருகங்கள் மனிதர் போர்வையில் உலவுவதால் அவை கண்களுக்கு எளிதாக தெரியாது. அந்த மிருகம் குற்றம் செய்ததாக புகார் வந்ததும் உடனடியாக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நிதி விவகாரத்தில் தமிழ்நாடே கொந்தளிப்பில் இருப்பதை மடைமாற்றி பாஜவை காப்பாற்றுகிறார் எடப்பாடி: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: