அத்வாலே கட்சிக்கு ஒரு தொகுதியைக் கூட ஒதுக்க முடியாது: மராட்டிய பாஜக முடிவால் கூட்டணிக்குள் திடீர் குழப்பம்

மும்பை: பாஜக கூட்டணியில் இந்திய குடியரசு கட்சிக்கு ஒரு தொகுதிகூட ஒதுக்கப்படாதது தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக அக்கட்சி தலைவரும் ஒன்றிய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். மராட்டிய சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு மேற்கொள்வது தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. பாஜக 121 தொகுதிகளுக்கும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 65 தொகுதிகளுக்கும், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 49 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். எஞ்சிய 50க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கான உடன்பாடு எட்டப்படாமலேயே உள்ளது. நாளையுடன் வேட்பு மனுதாக்கல் நிறைவடைய உள்ள நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில் பாஜகவின் நீண்டகால கூட்டணி கட்சியான இந்திய குடியரசு கட்சியின் தலைவரும் ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே, மராட்டிய துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சட்டமன்ற தேர்தலில் இந்திய குடியரசு கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்க முடியாது என பாஜக தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. மராட்டியத்தில் உள்ள 288 தொகுதிகளில் 2 தொகுதிகளை இந்திய குடியரசு கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என ராம்தாஸ் அத்வாலே பாஜகவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் ஒரு தொகுதி கூட ஒதுக்க முடியாது என பாஜக மறுத்துவிட்டதால் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து கட்சியினருடன் அத்வாலே ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post அத்வாலே கட்சிக்கு ஒரு தொகுதியைக் கூட ஒதுக்க முடியாது: மராட்டிய பாஜக முடிவால் கூட்டணிக்குள் திடீர் குழப்பம் appeared first on Dinakaran.

Related Stories: