எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பதா? பத்திரிகையில் வரும் செய்திகளே போதுமானது: எடப்பாடிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

சென்னை: சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள கூவம் முகத்துவாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: பொதுவாக மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் சென்னை மாநகரம் பாதிக்கப்படும். எனவே முன்னெச்சரிக்கையாக பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அனைத்து துறைக்கும் முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.

அதோடு நிற்காமல் அந்தந்த துறை செய்யக்கூடிய பணிகளுக்கு நிதியும் ஒதுக்கப்பட்டது. அதன்படி நீர்வளத்துறைக்கு ரூ.38.5 கோடி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் 178 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் சென்னையில் பாதிப்பு ஏற்படவில்லை. குறிப்பாக சென்னையில் வெள்ள நீர் கடலில் வடிவதற்கு கூவம், அடையாறு, எண்ணூர் ஆகிய மூன்று முகத்துவார வழியாகவே கடலில் கலக்க வேண்டும். ஆனால் போதிய நீர் வழித்தடம் இல்லாத காரணத்தால் கடந்த காலங்களில் பிரச்னைகள் ஏற்பட்டன.

இதனை சரிசெய்யும் பொருட்டு கூவம் முகத்துவாரத்தில் வருடம் முழுவதும் தூர்வாரப்பட்டதால் நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் மழை தடுப்பு பணிக்கு வெள்ள அறிக்கை வேண்டும் என கேட்கிறார். பத்திரிகை செய்தியில் கருப்பு மையால் வரும் அறிக்கையே போதுமானது. எதற்கெடுத்தாலும் வெள்ள அறிக்கையா கேட்பது? மேலும் கூவம் ஆற்றை திமுக அரசுதான் சீரமைப்பு செய்தது, அதிமுக ஒரு வேலைக்கூட செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார். அவருடன் நீர்வளத்துறை செயலாளர் மணிவாசகன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பதா? பத்திரிகையில் வரும் செய்திகளே போதுமானது: எடப்பாடிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் appeared first on Dinakaran.

Related Stories: