கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீரின் அளவு குறைப்பு: பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பு

ஊத்துக்கோட்டை, அக். 17: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் பருவ மழையின் காரணமாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா – தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டு தோறும் ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும், 3 டிஎம்சி சேதாரம் என மொத்தம் 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.கண்டலேறு அணையில் 18 டிஎம்சி தண்ணீர் இறுப்பு உள்ளது. தெலுங்கு கங்கா ஒப்பந்தப்படி 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடலாம். மேலும் இந்த வருடம் ஜூலை மாதம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை ஆந்திர அரசு வழங்காத நிலையில், தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் தண்ணீர் திறக்க வேண்டும் என ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு கடந்த மாதம் 19ம் தேதி காலை 11 மணியளவில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட்டது. பின்னர் படிப்படியாக உயர்த்தி 1200 கன அடியாகவும், மறுநாள் 1300 கன அடியாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்டை வந்தடைந்தது. தொடக்கத்தில் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் வினாடிக்கு 195 கன அடியாகவும் பின்னர் படிப்படியாக உயர்த்தி 300 கன அடிவரை உயர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மேலும் தற்போது ஆந்திராவில் மழை பெய்து கொண்டிருப்பதால் 1300 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முதல் கண்டலேறு அணையிலிருந்து வெறும் 300 கன அடியாக குறைத்து தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். ஆனால் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் மழைநீருடன் சேர்ந்து 501 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது.

The post கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீரின் அளவு குறைப்பு: பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: