கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை அதிகரிப்பு

மதுரவாயல்: தொடர் மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால், காய்கறி விலை கிடுவிடுவென உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் லாரிகளில் வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளிமாநிலத்தில் இருந்து வரும் காய்கறிகள் தாமதமாக மார்க்கெட்டுக்கு வருகிறது. மேலும், வரத்து குறைந்துள்ளதாலும் காய்கறி விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஒரு கிலோ பீன்ஸ் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெங்காயம் ரூ.60க்கும், சின்ன வெங்காயம் ரூ.80க்கும், தக்காளி ரூ.85க்கும், கேரட் ரூ.70க்கும், முருங்கைகாய் ரூ.80க்கும், பச்சை மிளகாய் ரூ.70க்கும், சேனைகிழங்கு ரூ.65க்கும், சேப்பகிழங்கு ரூ.50க்கும், பீட்ரூட், பீர்க்கங்காய், நூக்குல், காராமணி ரூ.40க்கும், பாகற்காய், கொத்தவரங்காய் ரூ.30க்கும், கோவக்காய், காலிபிளவர் ரூ.35க்கும், சவ்சவ், முள்ளங்கி, வெண்டைக்காய், கத்திரிக்காய், சுரக்காய், வெள்ளரிக்காய் ரூ.25க்கும், பட்டாணி ரூ.200க்கும், இஞ்சி ரூ.170க்கும், பூண்டு ரூ.300க்கும், எலுமிச்சை பழம் ரூ.130க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு மற்றும் மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், ‘‘வெளி மாநிலங்கள், தமிழ்நாடு மற்றும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோயம்பேடு மார்க்கெட் காய்கறிகள் தாமதமாக வருவதாலும் வரத்து குறைந்துள்ளதாலும் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மழை நீடித்தால் மேலும் காய்கறிகள் விலை உயரும்,’’ என்றார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: