திருத்தணி கவுன்சிலர் தாக்கப்பட்ட விவகாரம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்

திருத்தணி: திருத்தணியில் கவுன்சிலர், வழக்கறிஞரை தாக்கிய அண்ணன், தம்பி மீது வழக்குப்பதிவு செய்ய வழங்கிய புகார் மனுவை ஏற்க மறுத்த போலீசாரை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தணி நகராட்சி 8வது வார்டு திமுக கவுன்சிலர், வழக்கறிஞர் கே.எஸ்.அசோக்குமார் கடந்த 12ம் தேதி இரவு ம.பொ.சி சாலையில் உள்ள ஒரு மருந்து கடையில் மருந்து வாங்கினார். அப்போது, அப்பகுதியில் வசிக்கும் கணவரை இழந்த ஒரு பெண் மகனுடன் மருந்து கடைக்கு வந்துள்ளார்.

கவுன்சிலர் அசோக்குமார் அந்த பெண்ணை தனது மொபைல் போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அசோக்குமாருக்கும் அந்த பெண்ணின் மகன் பாலச்சந்தர் (22) என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. பாலச்சந்தர் தனது சகோதரர் அருண்குமார் (20) என்பவரை வரவழைத்து இருவரும் சேர்ந்து கவுன்சிலர் அசோக்குமாரை தாக்கியுள்ளனர். இதில், அவரது கை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த அசோக்குமாரின் ஆதரவாளர்கள் சகோதரர்கள் இருவரையும் சுற்றிவளைத்து தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து, திருத்தணி காவல் நிலையத்தில் பாலச்சந்தர் புகார் அளித்தார். புகாரை பெற்ற திருத்தணி காவல் ஆய்வாளர் மதியரசன், திமுக கவுன்சிலர் அசோக்குமார், வழக்கறிஞர் அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். கவுன்சிலர் அசோக்குமார் கொடுத்த புகாரை திருத்தணி போலீசார் ஏற்க மறுத்து விட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த தாக்குதலில், ஒரு தரப்பினர் புகாரை மட்டும் பெற்றுக்கொண்டு வழக்குப்பதிவு செய்து ஒருதலைப்பட்சமாக செயல்படும் போலீசாரை கண்டித்து, திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று நீதிமன்றம் புறக்கணித்து, நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, அங்கு வந்த டிஎஸ்பி கந்தன் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்றார். அப்போது அவருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் ஒரு தரப்பினர் புகாரை மட்டும் பெற்றுக்கொண்டு வழக்குப்பதிவு செய்ததாகவும், பாதிக்கப்பட்ட வழக்கறிஞரின் புகாரை பெற மறுப்பது ஏன் என்று வாக்குவாதம் செய்தனர். இரவு நேரத்தில் வாரன்ட் பெறாமல் வழக்கறிஞர்கள் வீடுகளில் அத்துமீறி நுழைந்து சோதனை செய்ததையும் அவர்கள் கண்டித்தனர். இதனைதொடர்ந்து, அசோக்குமார் சார்பில் வழக்கறிஞர்கள் வழங்கிய புகார் மனுவை பெற்றுக்கொண்ட டிஎஸ்பி கந்தன் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தை கைவிட்டனர். போலீசாரை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திருத்தணி கவுன்சிலர் தாக்கப்பட்ட விவகாரம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: