சிறை விதிகளை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிறை விதிகளை மீறி செயல்படும் சிறைத்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறைக் கைதிகளை சந்திக்க, வழக்கறிஞர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கைதிகளை பார்க்கவும், பேசவும் வழக்கறிஞர்களை அனுமதிக்க வேண்டும்.

கைதிகளை பார்க்க செல்லும் வழக்கறிஞர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். பெண் வழக்கறிஞர்களுக்கு தனி கழிவறை அமைத்து தரவேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.காசிராஜன் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்பில் அதன் செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகி, புழல் சிறையில் இண்டர்காம் வசதி இன்னும் அமலில் உள்ளது. கைதிகளை சந்தித்து பேசுவதில் இன்னும் சிக்கல் உள்ளது என்றனர்.

இதைக்கேட்ட நீதிபதிகள், சிறையில் உள்ள கைதிகள் தங்களது குறைகளை வழக்கறிஞர்கள் மூலமே தெரியப்படுத்தும் நிலையில் இருவருக்குமான உரையாடல் ரகசியமாக இருக்க வேண்டியது முக்கியம். சிறை விதிகளை மீறி செயல்படும் சிறைத்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறையில் கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து சிறைத்துறை டிஜிபி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post சிறை விதிகளை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: