காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு வடக்கே கரையை கடந்தது: கனமழை பெய்யும் அபாயம் நீங்கியது

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை 4.30 மணி அளிவில் வட தமிழகம்- தெற்கு ஆந்திரக் கடற்கரைப் பகுதியில், புதுச்சேரிக்கும்- நெல்லூருக்கும் இடையில் சென்னைக்கு வடக்கே கரையைக் கடந்தது. இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் அபாயம் நீங்கியது. நேற்று பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை காணப்பட்டது.

இந்நிலையில், வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

அதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இதே நிலை 19ம் தேதியும் நீடிக்கும். அதன் தொடர்ச்சியாக 20ம் தேதியில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்கள் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதனால் அந்த மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

The post காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு வடக்கே கரையை கடந்தது: கனமழை பெய்யும் அபாயம் நீங்கியது appeared first on Dinakaran.

Related Stories: