கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான விதிமுறைகளை மாற்றக்கோரி மைதானத்தின் நடுவில் நாற்கலியில் அமர்ந்து போட்டியை நிறுத்திய பட்டாலியன் எஸ்.பி.

கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் அரை இறுதியில் போட்டிகளுக்கான விதிமுறைகளை மாற்ற வேண்டும் எனக்கூறி மைதானத்தின் நடுவில் நாற்காலியில் அமர்ந்து 2 மணி நேரம் போட்டிகளை நிறுத்திய பட்டாலியன் எஸ்.பி..,யால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்து வருகின்றன. இதில் ஒரு பகுதியாக இன்று அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் காவல்துறை, சுகாதாரத்துறை, பள்ளி கல்வித்துறை, வருவாய் துறை, வேளாண்மை துறை உள்பட பல துறைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் கைப்பந்து போட்டியில் பல்வேறு துறைகளை சேர்ந்த14 அணிகள் கலந்து கொண்டன. நாக்அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் பல அணிகள் வெளியேறியது. இதில் செவன்த் பட்டாலியன் சார்பில் 2 அணிகளும், ஒரு போலீஸ் அணியும், ஒரு கல்வி துறை அணியும் அரை இறுதி போட்டிகளுக்கு முன்னேறியது.

நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் அரை இறுதி போட்டியும் நாக் அவுட் முறையில நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த நேரம் அங்கு வந்த போச்சம்பள்ளி பட்டாலியன் எஸ்.பி. சங்கு, அரை இறுதி போட்டிகளை லீக் முறையில தான் நடத்த வேண்டும் என கூறி கைப்பந்து போட்டி நடைபெறும் மைதானத்தின் நடுவில் நாற்காலி போட்டு அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். லீக் போட்டி நடத்துவதற்கு போலீஸ் அணியும், கல்வித்துறை அணியும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போட்டிகள் நடக்கவில்லை.

இதைத் தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு பிறகு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு போட்டிகள் நடத்தப்படுவதாக முடிவு செய்யப்பட்டு போட்டிகள் நடந்தன. பொதுவாக முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டு வரும் நிலையில், திடீரென்று முதன் முறையாக அரை இறுதி போட்டிகளை லீக் முறையில் நடத்த வேண்டும் என பட்டாலியன் எஸ்.பி. சங்கு கூறி மைதானத்தின் நடுவில் நாற்காலி போட்டு அமர்ந்து போட்டியை நடத்தவிடாமல் தடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி. தங்கதுரை, இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

The post கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான விதிமுறைகளை மாற்றக்கோரி மைதானத்தின் நடுவில் நாற்கலியில் அமர்ந்து போட்டியை நிறுத்திய பட்டாலியன் எஸ்.பி. appeared first on Dinakaran.

Related Stories: