குஜராத் சபர்மதி ஆற்றை போல் சென்னை கூவம் ஆற்றை சீரமைக்க வேண்டும்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் கோரிக்கை


தூத்துக்குடி: குஜராத்தில் சபர்மதி ஆற்றை பிரதமர் மோடி சீரமைத்து உள்ளார். அதேபோன்று கூவம் ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கூவத்தை சீரமைப்பதற்கு பெரிய திட்டம் வேண்டும். குஜராத்தில் சபர்மதி ஆற்றை பிரதமர் மோடி சீரமைத்து உள்ளார். அதேபோன்று கூவம் ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலில் கூவத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை எல்லாம் அகற்றிவிட்டு அதன் அளவை உறுதிபடுத்த வேண்டும். அதன் பின்பு ஆற்றை தூர் வாரி, சீரமைக்க வேண்டும். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மீட்க தொடர்ந்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருப்பதற்காக ஜிபிஎஸ் கருவி பொருத்த ஒரு லட்சம் படகுகளுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கி உள்ளது. இதில், தமிழகத்திற்கு மட்டும் ரூ.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு ஒரு ஏமாற்று வேலையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

The post குஜராத் சபர்மதி ஆற்றை போல் சென்னை கூவம் ஆற்றை சீரமைக்க வேண்டும்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: