திருவள்ளூர் அருகே புட்லூரில் சிஎஸ்ஐ தேவாலயத்தில் உண்டியல் காணிக்கை திருட்டு

திருவள்ளூர், செப். 13: திருவள்ளூர் அடுத்த புட்லூர் பகுதியில் 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த குருசேகரம் சிஎஸ்ஐ கிறிஸ்து அரசர் தேவாலயம் உள்ளது. மேலும் இந்த திருச்சபையானது சனிக்கிழமை மகளிர் கூட்டம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை திருச்சபை ஆராதனை ஆகிய 2 நாட்கள் மட்டுமே திருச்சபை திறக்கப்படும். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சபை வழக்கம் போல மூடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு திருச்சபை அருகே உள்ள சபையின் பொருளாளர் மேத்யூ திருச்சபைக்குள் சத்தம் வருவதை கேட்டு ஓடி வந்து பார்த்துள்ளார். அப்போது திருச்சபையின் 2 கதவுகளும் உடைக்கப்பட்டு, உண்டியலும் உடைக்கப்பட்டு சிறுவர்கள் சண்டே கிளாஸ் வைத்த உண்டியல் பணம் சுமார் ₹3 ஆயிரம் திருடப்பட்டு இருந்ததை பார்த்து செவ்வாய்பேட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் திருச்சபையில் நடைபெற்ற திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் திருச்சபையில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் குறித்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் தற்பொழுது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளில் டிப் டாப் திருடன் ஒரு கையில் டார்ச் லைட்டை பிடித்துக் கொண்டு திருச்சபை உண்டியலை தேடுவதும் மற்றொரு கையில் உண்டியலை உடைப்பதற்கான கவுபார் வைத்திருப்பதும் வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது. மேலும் இந்த காட்சியில் சுவாரசியமாக திருச்சபையில் திருடுகிறோம் என்பதை உணர்ந்த திருடன் திருச்சபையின் புனிதத்தை காக்கும் வகையில் காலில் செருப்பு அணியாமல் தன்னுடைய செருப்பை கையிலே ஏந்தியவாறு திருச்சபை சிறுவர்கள் சேர்த்து வைத்த உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து எண்ணும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. திருச்சபையின் புனிதத்தை காக்கும் வகையில் திருடன் தன் கையில் செருப்பை ஏந்தியவாறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது திருவள்ளூர் பகுதியில் பெரும் பேசும் பொருளாக மாறி உள்ளது.

The post திருவள்ளூர் அருகே புட்லூரில் சிஎஸ்ஐ தேவாலயத்தில் உண்டியல் காணிக்கை திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: