திருத்தணியில் ரூ.20.97 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறப்பு: முதல்வர் காணொலியில் இன்று திறந்து வைக்கிறார்

திருத்தணி, மார்ச்.4: திருத்தணியில் ரூ.20.97 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். சுற்றுலா நகரமாக விளங்கும் திருத்தணியில் போக்குவரத்து நெரிசல் தடுத்து பயணிகளுக்கு வாகன சேவை மேம்படுத்தும் வகையில், புதிய பேருந்து நிலையம் அமைக்க ஏதுவாக நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டத்தின் கீழ், ரூ.20.97 கோடி மதிப்பீட்டில் அரக்கோணம் சாலையில் 4.60 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 28 பேருந்துகள் நிற்கும் வசதிகளுடன் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

புதிய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று பெயர் வைக்க திருத்தணி நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முடிவுற்று திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதற்காக நகராட்சி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கிறார். விழா ஏற்பாடுகளை நகர்மன்றத் தலைவர் சரஸ்வதி பூபதி தலைமையில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரத்தின் மையப் பகுதியில் செயல்பட்டு வந்த திரு.வி.க பேருந்து நிலையம் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் திருவள்ளூர் நகராட்சியின் சார்பில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது. இன்று (4ம் தேதி) முதல் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருவள்ளூர் ரயில் நிலையம் வரை மற்றும் திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை நகர பேருந்துகளும் மற்றும் சென்னை முதல் திருப்பதி மற்றும் திருப்பதி முதல் சென்னை செல்லும் அனைத்து பேருந்துக்களும் புதிய பேருந்து நிலையம் வந்து செல்லும்.

மேலும் திருத்தணி நகரத்தின் மையப்பகுதியில் செயல்பட்டு வரும் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் திருத்தணி-அரக்கோணம் சாலையில் புதிதாக ரூ.20.97 கோடி மதிப்பீட்டில் திருத்தணி நகராட்சியின் சார்பில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று (4ம் தேதி) திறக்கப்பட உள்ளது. இன்று முதல் அனைத்து இடங்களுக்கு செல்லும் பேருந்துக்களும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பொதுமக்கள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தங்கள் பயணத்தினை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் வரும் 30ம் தேதி முதல் அனைத்து இடங்களுக்கு செல்லும் பேருந்துக்களும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும், பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படாது என மாவட்ட கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

Related Stories: