அறநிலையத்துறை இணை கமிஷனர் மீது அவதூறு சஸ்பெண்ட் செய்யப்பட்ட செயல் அலுவலர் கைது

மதுரை: இந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் மீது பாலியல் அவதூறு பரப்பிய விவகாரத்தில், சஸ்பெண்ட் ஆன கோயில் செயல் அலுவலர் கைது செய்யப்பட்டார். இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை மீது 21 பெண் ஊழியர்கள், பாலியல் தொடர்பான புகார் மனுவை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைத்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதுதொடர்பாக மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம், செல்லத்துரை அளித்த புகாரில், ‘‘விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் செயல் அலுவலரான ஜவகர் மீது பல புகார்கள் வந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி, அவரை சஸ்பெண்ட் செய்தேன். ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கடந்த ஜூலை 31ல் பணி நிறைவு பெற வேண்டியவரை ஓய்வுக்கு அனுமதிக்கவில்லை. இதில் என் மீது வன்மம் கொண்டு, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் என் நடத்தை குறித்து போலி ஆவணங்களை உருவாக்கி, அவதூறு கருத்துகளை பரப்பியுள்ளார். இதிலுள்ள பெண் அலுவலர்கள் 21 பேர் கையொப்பம் உண்மையானதல்ல’’ என தெரிவித்திருந்தார்.

மேலும், அறநிலையத்துறை பெண் அலுவலர்களும் தங்களது பெயரை தவறாக பயன்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, கமிஷனரிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து முன்னாள் செயல் அலுவலர் ஜவகர் மீது மதுரை எஸ்எஸ் காலனி போலீசார் 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் விசாரித்தனர். இதில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, ஜூலை 31ல் போலியான புகாரை தயார் செய்து அறநிலையத்துறையின் உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து, சமூக ஊடகங்களில் பரப்பியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post அறநிலையத்துறை இணை கமிஷனர் மீது அவதூறு சஸ்பெண்ட் செய்யப்பட்ட செயல் அலுவலர் கைது appeared first on Dinakaran.

Related Stories: