புதுவை பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு தேர்வு வினாத்தாள் கசிவால் ஒத்திவைப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் வினாத்தாள் கசிவால் முதலாமாண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு கல்லூரிகளாக இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் பிம்ஸ், வெங்கடேஸ்வரா, மணக்குள விநாயகர் என 3 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் 830 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் ஆண்டுதோறும் சென்டாக் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

இங்கு முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று புதுச்சேரி பல்கலைக்கழகம் தேர்வு அட்டவணை வெளியிட்டிருந்தது. அதன்படி, கடந்த 2ம் தேதி தேர்வு எழுத மாணவர்கள் சென்றுள்ளனர். அப்போது, தேர்வுகள் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதே சமயம், புதுச்சேரி பல்கலைக்கழகம் சார்பில் நிர்வாக காரணங்களுக்காக தேர்வை ஒத்தி வைப்பதாகவும், திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டு இணைப்பு கல்லூரிகளின் டீன்கள், இயக்குநர்களுக்கு உதவி பதிவாளர் (மருத்துவம்) முருகன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

வினாத்தாள் கசிந்துள்ளதே தேர்வு ஒத்திவைப்புக்கு காரணம் என கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரித்த போது, ‘எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு மாணவர்களின் சான்றிதழ்களை பல்கலைக்கழகம் ஆய்வு செய்து அனுமதி அளிக்கவில்லை. இதன் காரணமாகவே தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர். இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் அதிகாரப்பூர்வமான விளக்கத்தை இதுவரை தெரிவிக்கவில்லை.

The post புதுவை பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு தேர்வு வினாத்தாள் கசிவால் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: