செங்கல்பட்டு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி வகுப்புகள்: வரும் 8ம் தேதி தொடக்கம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-2, உதவி பிரிவு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நேரடி நியமனமத்திற்கான போட்டி தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், குரூப்-2ல் 507 காலிப்பணியிடங்கள் மற்றும் குரூப்-2ஏவில் 1820 காலிப்பணியிடங்கள் என மொத்தமாக 2327 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டித்தேர்விற்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் இதர விவரங்கள் அறிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி உடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலை போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் இம்மாதம் 8ம் தேதி துவங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பானது சிறப்பான பயிற்றுநர்கள், இலவச இணைய வசதி மற்றும் போட்டி தேர்விற்கான புத்தகங்கள், மாதாந்திர இதழ்கள், செய்தித்தாள்கள் கொண்ட நூலக வசதியுடன் உள்ளது.

இப்போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம், விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 044-2742 6020 என்ற தொலைபேசி என்ற எண்ணிலும், 94868 70577, 63834 60933 ஆகிய அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள், தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப்-2 மற்றும் குரூப்-2ஏவிற்கான தேர்விற்கு செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்த இளைஞர்கள் அதிக அளவில் விண்ணப்பித்து, இத்தேர்விற்கு தயாராக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் டி-பிளாக் தரைத்தளத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post செங்கல்பட்டு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி வகுப்புகள்: வரும் 8ம் தேதி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: